பஸ் வண்டி – கனரக வாகனம் மோதியதில் 6 பேர் காயம்

213 0

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதி தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் வாகன விபத்தொன்று இன்று (25) புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் கனரக வாகனமும் மோதியதில் அறுவர் காயமடைந்துள்ள நிலையில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் வண்டியும் களனியை நோக்கி பயணித்த கனரக வாகன லொறியுமே இவ்வாறு மோதுண்டதில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.

சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் பஸ் வண்டி நிறுத்தப்பட்ட நிலையில் பின்னால் வந்த கனரகவாகனமே மோதியதால் இச் சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

காயமடைந்த அறுவரில் ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் ஒருவர் கந்தளாய் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இவ் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.