கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 67 பேர் கைது

149 0

கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக பயணம் செய்ய முயன்ற 67 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கடற்பகுதியில் சல்லிசம்பல்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் நிலாவெளி பொலிஸாருடன் இணைந்து திங்கட்கிழமை (23) இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த 67 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது

இதையடுத்து ,கைது செய்யப்பட்டவர்களில்  45 ஆண்களும் 7 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்குவதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் 5 பேர் மனிதக் கடத்தல்களுடன் தொடர்புடையவர்கள் என இலங்கை கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.