வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

190 0

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அருணி விஜேவர்தன இன்று திங்கட்கிழமை (23.05.2022) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் இராஜினாமாவை அடுத்து அமைச்சின் செயலாளராகக் கடந்த வெள்ளிக்கிழமை (20.05.2022) அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்ட நிலையிலேயே, நேற்றைய தினம் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதுடன் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் முன்னிலையிலும் உரையாற்றினார்.

;இலங்கை வெளிநாட்டு சேவையின் உறுப்பினரான அருணி விஜேவர்தன, இச்சேவையில் 34 வருடங்கள் ஈடுபட்டிருப்பதுடன் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சிலும், சர்வதேச நாடுகளிலுள்ள இலங்கைத்தூதரகங்களிலும், சர்வதேச நிறுவனங்களிலும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

குறிப்பாக ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத்தூதரகம், மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கைத்தூதரகம் ஆகிவற்றில் அருணி விஜேவர்தன பணியாற்றியுள்ளார்.

அத்தோடு ஒஸ்ட்ரியாவிற்கான இலங்கைத்தூதுவராகவும், வியன்னாவில் உள்ள ஐ.நா அமைப்புக்களுக்கான நிரந்தரப்பிரதிநிதியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

மேலும் வெளிவிவகார அமைச்சின் அங்கீகாரத்துடன் வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி முகவரமைப்பின் கொள்கை உருவாக்கல் செயலகத்தின் பணிப்பாளராகவும் வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளர் அருணி விஜேவர்தன கடமையாற்றியுள்ளார்.

பிரிட்டனின் கேம்பிரிஜ்ட் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் முதுமாணிப்பட்டம் பெற்றுள்ள அவர், அங்கு பிரிட்டிஷ் செவனிங் அறிஞராகத் திகழ்ந்தததுடன், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டமும், மேற்கு அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.