சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 07.05.2022 சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

323 0

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 28 ஆவது பொதுத்தேர்வாக 07.05.2022 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 61 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 4200 வரையிலான மாணவர்கள் பங்குபற்றினர்.

தமிழ்மொழித்தேர்வுடன் சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயபாடத் தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர். பத்தாம் வகுப்புத்தேர்வில் 381 மாணவர்களும் பதினோராம் வகுப்புத்தேர்வில் 224 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 228 மாணவர்களும் தோற்றியமை சிறப்பாகும். தம் தாய்மொழியைக்கற்று ஆர்வத்துடன் தேர்வு எழுதிய குழந்தைகளை வாழ்த்துவதுடன், அவர்களை ஊக்குவித்து வழிநடத்தும் பெற்றோரைப் போற்றுகிறோம்.

இத்தேர்வினைச் சிறப்பாக நடாத்துவதற்காகத் தமிழ்க் கல்விச்சேவையின் மாநில இணைப்பாளர்கள், தமிழ்ப்பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், தமிழ் இளையோர் ஆகியோர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். இத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும் தமிழ்க்கல்விச்சேவை நன்றி தெரிவிக்கிறது.