பாராளுமன்றை அவரசமாக கூட்டுங்கள் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை

182 0

பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

சபாநாயகரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போதே, மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் சுமந்திரன் எம்.பி.தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தின் அமர்வு எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆணைக்கு அமைவாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் அமுலாக்கப்பட்ட இச்சட்டம் பத்து நாட்கள் வரையில் செல்லுபடியானது. அதன் பின்னர் அது பாராளுமன்றினால் அனுமதிக்கப்படுகின்றதா இல்லையா என்பது வேறுவிடயம்.

<p>ஆனால் குறித்த காலப்பகுதியினுள் அவசரகாலச் சட்டத்தினைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயற்பாடுகளும் சட்டரீதியானவையாகவே கொள்ளப்படும். பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாது விட்டாலும் குறித்த பத்துநாட்களுக்குள் அச்சட்டத்தின் கீழ் நடைபெற்ற விடயங்கள் சட்ட வலுவற்றவையாக அமையாது.

ஆகவே, இந்த அவசரகால சட்டத்தினை தற்போதுஅமுலாக்கியமையின் பின்னால் வேறு திட்டங்கள் இருப்பதாகவே நாங்கள் கருகின்றோம். ஆகவே உடனடியாக பாராளுமன்றத்தினைக் கூட்டி இச்சட்ட அமுலாக்கம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று சபாநாயகரிடத்தில் வலியுறுத்தினோம்.

அச்சமயத்தில் அவர் நாளை மறுதினம் (நாளை திங்கட்கிழமை) கட்சித்தலைவர்கள் கூட்டத்தினை கூட்டுவதாகவும் அச்சமயத்தில் இந்த விடயத்தினை கலந்தாடலுக்கு எடுப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த அடிப்படையில் நாம் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இவ்விடயத்தினை அதீத கரினை கொள்ளவுள்ளோம் என்றார்.