மானிடப் பெருமையிதா?- -வன்னியூர் குருஸ்-

357 0

யாரிவர்கள் என்றுணர்ந்தும் பேரரக்கன் படைகொண்டு
யாரிவர்கள் என்றறியா வகையிலே சிதைவாக்கி
குண்டுகள் வீசிக் குருதியில் குளிப்பாட்டிக்
கொன்றும் குவித்தானே கொடுமையை நிலைநாட்டி.

மலையின் மேலிருந்து கொட்டும் அருவி
தரையை வந்து நனைக்குமே அதுபோல
தலையில் குண்டது பட்டுச் சிதைத்திட
உறையா நிலையோடே உதிரம் பாய்ந்ததே

குண்டுக்குத் தெரியுமா குழந்தைகள் யாரென்று
கண்டுணர அதற்கென்ன கண்கள் இருக்கிறதா?
கொன்று குவித்துக் கொண்டாடிய மனங்களே
மண்ணிலே நடந்த மானிடப் பெருமையிதா?

-வன்னியூர் குருஸ்-