கடும் எச்சரிக்கையுடனான பிணை !

248 0

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணை வழங்கி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,யாழில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய “றோக் ரீம்” என்ற குழுவை யாழ் பொலிஸார் தீவிர தேடுதலில் பின் கைது செய்தனர்.

இந்தக் குழுவின் தலைவராக பிரபல பாடசாலை ஒன்றின் மாணவத்தலைவனும், அவுஸ்திரேலிய மினி ஒலிம்பிக் தடகள போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற செந்தூரன் என்பவர் இனம் காணப்பட்டார்.

குறித்த நபர்களிடம் இருந்து வாள்கள், கைக்கோடரிகள், மற்றம் கைக்குண்டுகள் போன்றன மீட்கப்பட்டதாக யாழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ் நீதவான் நீதிமன்றால் கடந்த 7 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த 8 சந்தேகநபர்களின் பிணை மனு யாழ்.மேல் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி குறித்த நபர்களை கடுமையாக எச்சரித்ததுடன் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ருபாய் தண்டம் விதித்ததுடன், 2 இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

மேலும். எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் யாழ் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவும் உத்தரவிட்டுள்ளார்.எனினும் பிணை வழங்கப்படும் காலப்பகுதிகளில் வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டால் பிணை நிராகரிக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்தார்