றம்புக்கண சம்பவம்: முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட நால்வர் அதிரடியாக கைது

107 0

றம்புக்கணயில் அண்மையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

றம்புக்கணயில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கி பிரயோகம் நடத்த அனுமதி வழங்கியமைக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் உத்தரவிடும் காணொளியொன்று சிங்கள ஊடகமொன்றின் கமராவில் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரிகள் குண்டசாலை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது