அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார ஸ்திரமின்மைக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் மலையகம் உள்ளிட்ட தோட்டப்புறங்கள் மற்றும் நகரங்களில் 300 க்கும் மேற்பட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, இப்போராட்டங்கள் அரசாங்கத்திற்கு ஒரு எச்சரிக்கை போராட்டமாக அமைந்தது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
இ.தொ.காவின் நோக்கம் ஒருவரை ஒருவர் குற்றம் கூறாமல் மலையக மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைத்து, பொருளாதாரத்தை சீர்செய்ய நடவடிக்கையெடுப்பதாகும்.
இன்றையதினம் ஒரு சில கட்சிகள் இ.தொ.கா தோட்ட தொழிலாளர்களை கறுப்பு பட்டி அணிந்து வேலைக்கு செல்லுமாறு கூறி போராட்ங்களை சீர்க்குலைப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு தான் எந்தவிதமான கருத்தும் கூற விரும்பாத சூழ்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
இன்று மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு தற்போதைய சூழலில் ஒரு நாள் சம்பளத்தை தியாகம் செய்து போராட்டத்தில் கலந்துகொள்ளும் சூழ்நிலையில் மக்கள் இல்லை. இதை கருத்தில் கொண்டு வேலைக்கு செல்பவர்கள் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பை வெளியிடலாம் என்றும் , அதே வேலை நகரபுறத்தில் உள்ள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களால் முன்னெடுக்கும் போராட்டங்களில் ; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் தங்களைப்போல் வேலைக்கு செல்லாமல் வீட்டுக்குள் இருந்து போராட்டம் செய்யுமாறு இ.தொ.கா அறிவிக்கவில்லை. ; காரணம் அதனால் யாருக்கும் எந்த விதமான பயனும் இல்லை. 1000 ரூபாய் சம்பளத்தையும் இழந்து நான்கு சுவருக்குள் போராட்டம் செய்வது தாங்களே தங்களுக்கு எதிராக போராட்டம் செய்வது போல்.
ஏனைய கட்சிகளுக்கு கூறவிரும்புவது என்னவென்றால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை குறைகூறுவதை விட்டுவிட்டு எதிர்காலத்தில் மலையக மக்கள் வளர்ச்சியில் கூடிய கவனம் செலுத்தும் பட்சத்தில் மலையக மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு எட்ட முடியும் என நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.