மீன்பிடி துறைமுகங்களில் படகுகள் சேதமடைவதை தடுக்க கடல் அலை தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று பேசிய பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், “பேராவூரணி தொகுதி, சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில், புயல் – மழை காலங்களின் போது கடலலை தடுப்புச் சுவர் இல்லாத நிலையில் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் சேதமடைகிறது. இதைத் தடுக்க மேற்கூறிய மீன்பிடித் துறைமுகங்களில் கடலலை தடுப்புச் சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் கடலலை தடுப்புச்சுவர் அமைத்துத்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.