மருந்து பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகளை தளர்த்துமாறு கோரி மருந்து தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மருந்தக உரிமையாளர் சங்கம் விடுத்த கோரிக்கையை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையில் தற்போது மருந்து பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகளை தளர்த்துவதால் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மற்றும் விலை கட்டுப்பாட்டு சபை இணைந்து இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனைக்கு அமைவாக நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமை நிலவுகின்ற நேரத்தில் விலைக் கட்டுப்பாட்டை நீக்குவது பொருத்தமாகாது.
மாறாக டொலரின் விலை ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் மருந்துகளுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிப்பது சாத்தியப்படும்
தனியார் சந்தையில் மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் விலைக் கட்டுப்பாட்டு குழு அமைச்சரிடம் பல யோசனைகளை கையளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

