உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் 3 ஆண்டு நிறைவடைவதையொட்டி நாட்டின் சகல கத்தோலிக்கத் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடத்துவதற்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்திலும், நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் உயிரிழந்தவர்களுக்கான விசேட நினைவு ஆராதனை ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. மேலும், அன்றைய தினம் காலை 8.45 மணிக்கு சகல தேவாலயங்களிலும் மணியோசை எழுப்பப்படவுள்ளதுடன், செப வழிபாடுகளும் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அன்றைய தினம் காலை நீர்கொழும்பு கட்டுவப்பட்டி தேவாலயத்திலிருந்து நீர்கொழும்பு கிறீன் பார்க் வரை அமைதி வழிப் பேரணியொன்றும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை குறிப்பிடுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 278 பேர் வரையில் பலியாகியதுடன், பலர் படுகாயமடைந்த நிலையில் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

