மெழுகை மொத்தமாக கொள்முதல் செய்து தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் சட்ட சபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தில் பேசிய சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, தென் மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்த படியாக முக்கிய தொழிலாக தீப்பெட்டி தொழில் உள்ளதாகவும், தற்போது மூலப்பொருட்களின் விலை 40 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதால், 6 லட்சம் தொழிலாளர்கள், ஏழை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூலப்பொருள் விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் நாட்டில் 700க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற் சாலைகளில், 4 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசியில் மட்டும் 500 நிறுவனங்கள் உள்ளதாகவும், தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் தொடர்பாக துறை அதிகாரிகளுடன் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், அமெரிக்க பொருளாதார கட்டுப்பாடுகள் காரணமாக பொட்டாஷியம் குளேரைடு விலை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூற அவர் அதேபோல்
மெழுகு விலை, காகித அட்டை விலையும் உயர்ந்துள்ளதாகவும், இப்பிரச்சனையை கருத்தில் கொண்டு, சிட்கோ நிறுவனத்தின் மூலம் மெழுகை மொத்தமாக கொள்முதல் செய்து தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
அதேபோல், காகித அட்டை தட்டுப்பாடும் ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் படிப்படியாக குறையும் என்றும் அவர் கூறினார்

