அச்சு ஊடகங்கள் மிகுந்த நம்பகத்தன்மை உடையவை, தனி அடையாளம் கொண்டவை என தினத்தந்தி குழும இயக்குநர் பா. சிவந்தி ஆதித்தன் தெரிவித்துள்ளார்.
தென்மண்டல இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தென் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு நடைபெற்று வருகிறது.
இதில் “நவீன ஊடகங்களின் வளர்ச்சியால் அச்சு ஊடகம் சந்திக்கும் சவால்கள் மற்றும் அதை எதிர்கொள்ளும் திட்டங்கள்” குறித்த குழு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் தினத்தந்தி குழும இயக்குநர் பா. சிவந்தி ஆதித்தன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
செய்தித்தாள் விற்பனை உலகளவில் குறைந்தாலும், செய்திக்கு என்றுமே பஞ்சம் வராது.
செய்தி என்பது எப்போதுமே அத்தியாவசியமாக தேவைப்படும் ஒன்றாகவே நீடிக்கும். எனவே செய்திகளை எந்த ஊடகம் மூலமாக வெளியிடுகிறோம் என்பது முக்கியம் அல்ல. என்றாலும், செய்திகள் வெளியிடப்பட்டு கொண்டேதான் இருக்கும்.
நமது நாட்டில் ஆங்கிலத்தைவிட பிராந்திய மொழியைத்தான் அதிக மக்கள் பேசுகின்றனர். எனவே அதிக மக்கள் பிராந்திய மொழி செய்தித்தாள்களையே படிக்கிறார்கள்.
அச்சு ஊடகங்கள் மிகுந்த நம்பகத்தன்மை உடையவை, தனி அடையாளம் கொண்டவை.
செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் வித்தியாசம் உள்ளது. வெளியிடும் கருத்து ஒன்றுதான் என்றாலும் அதை வெளியிடும் விதங்களில் சமூக வலைதளமும், செய்தித்தாள்களும் வித்தியாசம் காட்டுகின்றன. ஆனால் செய்தியை சேகரிப்பதற்கான ஆதாரங்கள் முக்கியமாக உள்ளன.
சமூக வலைதளத்தில் வெளியிடப்படும் செய்திகள், இளைஞர்களை கவர்வதாக இருக்க வேண்டும்.
1990-ம் ஆண்டுக்கு பிறகு பிரேக்கிங் செய்திகளை டிவி சேனல்கள் மட்டுமே கொடுத்தன. தற்போது வலைதளங்களும் அவற்றை கொடுத்து வருகின்றன.
இதை உடைத்து மீண்டும் செய்தித்தாள் பிரேக்கிங் செய்தி கொடுப்போம்.
வெப் 3.0 தான் அடுத்தகட்ட தொழில்நுட்பம். நமது நாடு அந்தத் தொழில்நுட்பத்தை விரைவில் பயன்படுத்த உள்ளது.
வாசிக்கும் பழக்கம் இன்னும் செத்துவிடவில்லை. வாசிக்கும் ஊடகம்தான் மாறி வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் மெய்நிகர் தொழில்நுட்பம், ‘மெட்டா வெர்சஸ்’ போன்ற தொழில்நுட்பங்களில் மக்கள் இருப்பார்கள்.
‘மெட்டா வெர்சசிலும்’ நாங்கள் செய்திகளை கொடுத்தாக வேண்டும். அதை கண்டிப்பாக செய்வோம். விரைவில் நிகழும் எதிர்காலத்தில் ‘மெட்டா வெர்சஸ்’ தேவை அவசியமானதாக இருக்கும். எனவே அதற்கானவற்றை கொள்முதல் செய்ய வேண்டியதிருக்கும்.

