அரசியல் கட்சிகள் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தன

249 0

இலங்கையில் தற்போது நிலவும் தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை மேலும் சில அரசியல் கட்சிகள் நிராகரித்துள்ளன.

தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) ஆகிய கட்சிகள் எந்தவொரு சர்வகட்சி, இடைக்கால அல்லது தேசிய அரசாங்கப் பொறிமுறைகளிலும் பங்குபற்றப் போவதில்லையென தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தம்முடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளது.

இன்று காலை பிரதான  எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இந்த வாய்ப்பை நிராகரித்தது, அதன் தலைவர் சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் கட்சி ஒருபோதும் ஒப்பந்தம் செய்யவோ அல்லது நிர்வாகத்தை அமைக்கவோ போவதில்லை என்று கூறினார்.

அத்தோடு மக்கள் விடுதலை முன்னணியும்  (ஜே.வி.பி) ஜனாதிபதியின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டது, அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, பொதுமக்களின் அழைப்புகளுக்கு செவிசாய்த்து தனது ராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில். ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியதையடுத்து, தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கு கைகோர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி இன்று காலை அழைப்பு விடுத்தார்.

இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.