அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனப் பிரிவில், சிறுபோக நெற்செய்கை விதைப்புப் பணிகளை, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டுமென, அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளார் ரீ.விவேக்சந்திரன், இன்று (04) தெரிவித்தார்.
குறித்த பிரிவில் வலது கரை வாய்க்கால் நீர்ப்பாசனத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று, தீகவாபி, இலுக்குச்சேனை ஆகிய மூன்று வலயங்களில் மொத்தம் 22,894 ஏக்கர் நெற்செய்கை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வலது கரை வாய்க்கால் நீர்ப்பாசனப் பிரிவில் எதிர்வரும் 07ஆம் திகதிக்கு முன்னர் விதைப்புப் பணிகளை நிறைவு செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனப் பிரிவில் ஆற்றுப் பாய்ச்சலுக்குட்பட்ட வீரையடி பிரதேச நெற்காணிகளில் 04,706 ஏக்கரில் நெற்செய்கை பண்ணப்படவுள்ளது.
இக்காணிகளில், எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் விதைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனப் பிரிவில் மொத்தம் இம் முறை 27, 600 ஏக்கரில் நெற் செய்கை பண்ணப்படவுள்ளதோடு, சிறுபோக நெற்செய்கைக்கு அனுமதிக்கப்படாத காணிகளுக்கு எக்காரணம் கொண்டும் நீர் விநியோகிக்கப்படாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

