நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் சென்னை துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டம் இரண்டடுக்கு மேம்பாலமாக மாற்றிய மைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை முழுமையாகத் தயாராகியுள்ளது.
சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் கடந்த நிதியாண்டின் செயல்பாடுகள் குறித்து இரு துறைமுகங்களையும் நிர்வகித்து வரும் துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுனில் பாலிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் வசமிருந்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் 50 சதவீத பங்குகளையும் சென்னை துறைமுகம் முழுமையாக அண்மையில் வாங்கியதையடுத்து எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் முழு உரிமையாளராக சென்னை துறைமுகம் உருவெடுத்துள்ளது. கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் சுமார் 49 மில்லியன் டன் சரக்குகளையும், எண்ணூர் துறைமுகம் சுமார் 39 மில்லியன் டன் சரக்குகளையும், இரு துறைமுகங்களும் ஒட்டு மொத்தமாக சுமார் 87 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் ஒட்டு மொத்த வருவாயாக ரூ.826 கோடியும், காமராஜர் துறைமுகம் ரூ. 827 கோடியும் ஈட்டியுள்ளன. வரிக்கு முந்தைய லாபமாக சென்னை துறைமுகம் ரூ. 117 கோடியும், எண்ணூர் காமராஜர் துறைமுகம் ரூ.531 கோடியும் ஈட்டியுள்ளது.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் சென்னை துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டம் இரண்டடுக்கு மேம்பாலமாக மாற்றிய மைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை முழுமையாகத் தயாராகியுள்ளது.
கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மாதிரி துறைமுகமாக அடையாளப்படுத்தப்பட்ட எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு சென்னைத் துறைமுகம் முழு உரிமையாளராக இருந்தாலும் காமராஜர் துறைமுகம் தொடர்ந்து தனித்தன்மையுடன் இயங்கும். சென்னைத் துறை முகத்தின் தலைவரே காமராஜர் துறைமுகத்திற்கும் தலைவராக இருந்தாலும் காமராஜர் துறைமுகத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ள மேலாண்மை இயக்குநர் விரைவில் நியமிக்கப்படுவார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. சென்னை-புதுச்சேரி இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது குறித்த பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை-கன்னியாகுமரி இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது குறித்த திட்டம் ஆரம்ப நிலையில்தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சென்னைத் துறைமுகத் துணைத் தலைவர் பாலாஜி அருண் குமார், துறைத் தலைவர்கள் கிருபானந்த சாமி, ஜெயசிம்மா, காமராஜர் துறைமுக பொது மேலாளர்கள் குணசேகரன் சஞ்சய் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

