நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்துக்காக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும்- அன்புமணி பேச்சு

151 0

37,000 ஆறுகள் இருக்கிறது, அவற்றை நாம் தான் சீர்ப்படுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வகையில் வெள்ளத்தை நாம் வரமாக பார்க்க வேண்டும். வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சத்தை நாம் அதிகளவில் சந்திப்போம்.

சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க் கல்லூரியில் இன்று “பருவநிலை மாற்றம்” தொடர்பான கருத்தரங்கு நடந்தது.

இதில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ், மற்றும் வெற்றிச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பருவ காலநிலை மாற்றம் என்பது மிகவும் முக்கியமான வி‌ஷயம். பல மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. ஆனால் காலநிலை மாற்றத்தினால் வருங்கால தலைமுறைக்கு தான் பாதிப்பு அதிகம். இந்த ஆபத்தான பிரச்சினை பற்றி பாராளுமன்றத்திலும் நான் பேசி இருக்கிறேன்.

முக்கியமாக காலநிலை மாற்றத்திற்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஏற்படும் புவி வெப்பநிலை சாதாரண நிலையை விட அதிகமாக இருக்கிறது. காலநிலை மாற்றத்தினால் வெள்ள பாதிப்பு சென்னையில் அதிக அளவில் ஏற்பட்டது.

2015-ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பற்றி அரசாங்கத்திடம் தெரிவித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. என்னை போன்றவர்கள் பல யோசனைகளை அரசுக்கு வழங்கி இருக்கிறோம். பசுமை தாயகம் மூலம் எப்படி சென்னையை வடிவமைப்பது என்ற யோசனையும் வழங்கி இருக்கிறேன்.

40 வருடத்திற்கு முன்பு கூவம் ஆற்றில் இருந்து தான் கோவில்களுக்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு செல்வார்கள்.ஆனால் தற்போது அது அசுத்தம் அடைந்து உள்ளது.

37,000 ஆறுகள் இருக்கிறது, அவற்றை நாம் தான் சீர்ப்படுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வகையில் வெள்ளத்தை நாம் வரமாக பார்க்க வேண்டும். வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சத்தை நாம் அதிகளவில் சந்திப்போம்.

காலநிலை மாற்றத்தினால் மிக குளிர் காலநிலையை கொண்ட கனடாவில் ஏற்கனவே வெப்ப அலையினால் உயிர் பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.

பல பனிப் பாறைகள் உருக தொடங்கி உள்ளது. உலகில் இருக்கும் அனைத்து நாடுகளும் காலநிலை மாற்றத்தினால் ஏதோ ஒரு வகையில் பாதிப்பு அடைந்து உள்ளது.

தமிழகத்தில் காலநிலை மாற்றத்தினால் 911 மில்லி மீட்டர் மழை பொழிவு ஏற்பட்டு உள்ளது.கால நிலை மாற்றம் தொடர்பாக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசு காலநிலை மாற்றத்தை அவசர பிரகடனமாக மாற்ற வேண்டும். காலநிலை மாற்றம் தொடர்பாக இளைஞர்கள் குரல் கொடுக்க இதுவே சரியான நேரம் ஆகும்.

காலநிலை மாற்றம் காரணமாக உலகில் அதிக அளவில் அகதிகள் உருவாகும் நிலை ஏற்படும்.ஏற்கனவே சென்னையில் வெள்ளத்தின் போது அகதிகளாக நாம் இருப்பதை பார்த்து இருக்கிறோம்.அடுத்த 50 ஆண்டுகளில் இந்த இடம் அமைந்து உள்ள பகுதி கடற்கரையாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் வருடத்தில் 4000 பேர் மாசு பிரச்சினையினால் இறந்துபோகிறார்கள்.

சென்னையில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை 8,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் .மேலும் அனைவருக்கும் இலவச பயணம் எனவும் அறிவிக்க வேண்டும் .இவ்வாறு செய்வதினால் கார் மற்றும் இருசக்கர வாகன பயன்பாடு குறையும் .இதனால் காற்று மாசு பெருமளவில் குறையும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.