உக்ரைன் மீது ரஷியா 38-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
04.10: ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மரியுபோல் நகரில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை வெளியேற்றுவதற்கு அந்நகரத்திற்கு செல்லும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. மூன்று கான்வாய் வாகனங்கள் பாதுகாப்புடன் செஞ்சிலுவை சங்க குழுவினர் மரியுபோல் நகருக்கு செல்ல முடியாமல் சபோரிஜியாவுக்கு திரும்பி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தங்களது செயல்பாடுகள் வெற்ற பெற இரு தரப்பினரும் ஒப்பந்தங்களை மதித்து பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவது மிகவும் முக்கியமானது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
02.50: ரஷிய எண்ணெய் கிடங்கை உக்ரைன் படைகள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துருக்கியில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியை கைவிட வேண்டும் என்று ரஷிய தூதுக்குழு வலியுறுத்தியது. உக்ரைன் பாதுகாப்பிற்கு ஐரோப்பிய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று உக்ரைன் சார்பில் பங்கேற்ற தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.

