முல்லைத்தீவு எரிபொருள் பதுக்கல் முறியடிப்பு

176 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருளின் பதுக்கல் நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் இராணவத்தினர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிரசன்னமாகியுள்ளார்கள்.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், எரிபொருள் நிலையங்களுக்கு கிடைக்கும் எரிபொருள்களை ஒரு சிலர் பல தடவைகள் பெற்று, பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி, மாங்குளம், ஒட்டுசுட்டான், முள்ளியவளை, முல்லைத்தீவு, நாயாறு, பதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு பகுதிகளில் கூட்டுறவுச் சங்கங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. இவை பலவற்றில் பெற்றோல் உள்ளபோதும் டிசல், மண்ணெண்ணைய் இல்லாத நிலை காணப்படுகின்றது.

துணுக்காய் ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவப் பிரசன்னத்துடனேயே எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகிறது.

நேற்று (24) அதிகாலை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற 6,600 லீற்றர் டீசல், ஒவ்வொரு வாகனங்களுக்கும் தலா 5,000 ரூபாய் வீதமே வழங்கப்பட்டது. அதேவேளை, மண்ணெண்ணை விநியோகமும் ஒரு குடும்ப அட்டைக்கு தலா 500 ரூபாய் வீதமே வழங்கப்படுகிறது.

அதேவேளை, இராணுவத்தினரால் வாகன இலக்கத் தகடுகள் பதியப்பட்ட பின்னரே எரிபொருள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.