கிழக்கு ஆசிரியர்களை கிழக்கிலேயே நியமிக்கவும்

176 0
தற்போது வழங்கப்படவுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனங்களில் கிழக்கு மாகாண கல்விக் கல்லூரி ஆசிரியர்களை, கிழக்கு மாகாணத்துக்கே நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப், இன்று (20) தெரிவித்தார்.

இது தொடர்பாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாட்டிலுள்ள கல்விக் கல்லூரிகளில் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

“2021ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் ஆளணி சுற்று நிருபத்துக்கமைய கிழக்கு மாகாணத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதனைவிட கல்வி அதிகாரிகள்,ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்ட வெற்றிடங்கள் இங்கு காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களை ஆசிரியர்களே நிரப்பி வருகின்றனர்.

“இந்த வகையில் மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் தற்போது காணப்படுகின்றன.

“இந்த நிலையில், தற்போது வழங்கப்படுகின்ற கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்கள் கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது வெளியாகியுள்ள பெயர்ப் பட்டியலின் மூலம் இதனை அறிந்து கொள்ள முடிகின்றது.

“மாவட்ட மற்றும் பிரதேச வெற்றிடங்களின் அடிப்படையிலேயே கல்விக் கல்லூரி பயிற்சி ஆசிரியர்களுக்கான தெரிவு இடம்பெறுகின்றது. எனவே, தற்போதைய இந்த நியமனம் கல்விக் கல்லூரி தெரிவு முறைக்கு முரணாக அமைந்து விடும்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.