காம்பியா அதிபராக 22 ஆண்டுகள் பதவி வகித்து மக்களால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் யாகியா ஜம்மே-வுக்கு அண்டை நாடான கினியா அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான காம்பியா இங்கிலாந்திடம் இருந்து 1965-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அதை தொடர்ந்து நடந்த சர்வாதிகார ஆட்சியாளரிடம் இருந்து 1994-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சி பறிக்கப்பட்டது.
யாகியா ஜம்மே அதிபராக பதவி ஏற்றார். கடந்த 22 ஆண்டுகளாக பதவி வகித்துவந்த இவரது கொடூரமான ஆட்சி முறைக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழுந்தனர்.
அதைதொடர்ந்து நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் அதிபர் யாகியா ஜம்மே படுதோல்வி அடைந்தார். அத்மா பாரோ அமோக வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றியை அதிபர் யாகியா ஏற்கவில்லை.
மேலும், பதவி விலகவும் அவர் மறுத்துவிட்டார். எனவே மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் அண்டை நாடான செனேகல் சென்ற அத்மா பாரோ அங்குள்ள காம்பியா நாட்டு தூதரகத்தில் காம்பியா நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்றார்.இதற்கிடையே, மக்கள் போராட்டத்துக்கு பணிந்த யாகியா பதவியில் இருந்து விலகினார். மேலும் காம்பியாவில் இருந்து வெளியேறவும் சம்மதித்தார்.
அதை தொடர்ந்து, அவர் அண்டை நாடான கினியாவுக்கு தனது மனைவியுடன் விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருக்கு அரசியல் தஞ்சம் அளித்துள்ளதை செய்தியாளர்களுக்கு வெளியிட்ட அறிக்கையின் மூலம் கினியா நாட்டின் தகவல் தொடர்புதுறை மந்திரி யூஜெனியோ ந்ஸே ஓபியாங் நேற்று உறுதிபடுத்தியுள்ளார்.

