உக்ரைன் – ரஷியா முதல் கட்ட பேச்சு வார்த்தை: உடன்பாடு எட்டப்படாமல் முடிந்தது

135 0

அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை போலாந்து – பெலாரஸ் எல்லையில் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

உக்ரைன் –  ரஷியா இடையேயான போர் ஐந்து நாட்களை தாண்டி நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.
உக்ரைன் தலைநகர் கிவ் நகரை, ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், போர் முடிக்கு கொண்டு வர உக்ரைன் – ரஷியா இடையே நேற்று பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த உயர்மட்ட தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷியா தரப்புக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது.
சண்டையை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.
பேச்சுவார்த்தைகள் ஐந்து மணி நேரம் நீடித்ததாக ரஷிய அதிபர் புதினின் உதவியாளரும் அந்நாட்டு தூதுக்குழு தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்தார்.
இரு நாடுகள் தரப்பில் எடுக்க வேண்டிய பொதுவான நிலைப்பாடுகள் குறித்த சில நடவடிக்கைகள் இந்த பேச்சுவார்த்தையின் போது கண்டறியப்பட்டதாக
அடுத்து வரும்  நாட்களில் பேச்சு வார்த்தையை தொடர இரு தரப்பும் ஒப்புக் கொண்டதாக அவர் கூறினார்.
இந்நிலையில் இரு நாடுகள் இடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை போலாந்து – பெலாரஸ் எல்லையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.