ஹங்கேரியில் இருந்து 240 இந்தியர்களுடன் புறப்பட்ட 3வது விமானம் டெல்லி வந்தடைந்தது

204 0

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து வந்த 2 விமானங்களில் 469 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

நேட்டோவில் சேரத்துடிக்கும் உக்ரைனை மட்டுப்படுத்த அந்த நாடு மீது போர் தொடுத்துள்ளது ரஷியா. இது உக்ரைனுக்கு நேரடி பாதிப்பு என்றால் பிற நாடுகளுக்கும் மறைமுகமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை, உக்ரைனில் சிக்கியிருக்கும் சொந்த நாட்டு மக்களை மீட்பதுதான் உடனடி சவாலாக மாறியிருக்கிறது. மாணவர்கள் உள்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக கடந்த 24-ம் தேதி மத்திய அரசு அறிவித்து இருந்தது.
அங்கு போர் மேகம் சூழ்ந்ததும் கடந்த 22-ம் தேதி ஏர் இந்தியா விமானம் மூலம் 240 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர்.
ஆனால், கடந்த 24-ம் தேதி போர் தொடங்கியதுமே, உக்ரைனின் வான்பகுதி பயணிகள் விமான போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
இதனால் அங்கு சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்பதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
அதேநேரம் உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டாலும், அங்கு வசிக்கும் இந்தியர்களை அண்டை நாட்டு எல்லைகளுக்கு வரச்செய்து அங்கிருந்து விமானம் மூலம் மீட்டு வர முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக சிறப்பு குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி உக்ரைன்வாழ் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அந்தந்த நாடுகளின் தலைநகரான முறையே புகாரெஸ்ட் மற்றும் புதாபெஸ்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
இவ்வாறு சென்ற விமானங்களில் முதல் விமானம் நேற்று பிற்பகல் 1.55 மணியளவில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 உக்ரைன்வாழ் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா வந்தடைந்தது. இதில் பெரும்பாலும் மாணவ-மாணவிகளே வந்திருந்தனர்.
இதேபோல, புகாரெஸ்ட்டில் இருந்து 250 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் இன்று அதிகாலை 3 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தது. அதில் பயணம் மேற்கொண்டவர்களை விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் முரளிதரன் ஆகியோர்  வரவேற்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 240 இந்தியர்களுடன் ஹங்கேரி நாட்டு தலைநகர் புதாபெஸ்டுவில் இருந்து புறப்பட்ட 3-வது விமானம் டெல்லி வந்தடைந்தது.
ஆபரேஷன் கங்கா திட்டத்தின்கீழ் உக்ரைனில் இருந்து தொடர்ந்து இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.