தலைக்கவசத்தால் அடித்து பெண் படுகொலை!

236 0

ரிதீகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமகி மாவத்தையில் உள்ள தேவால சந்தி பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு தலைக்கவசத்தால் பெண் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையுண்ட பெண்ணின் மகள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை தேடிப் சென்று கொலையுண்ட பெண் விபத்து குறித்து விசாரித்ததில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதன்போது, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தனது கையிலிருந்த பாதுகாப்பு தலைக்கவசத்தால் குறித்த பெண்ணை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ரிதீகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிதீகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.