மஸ்கெலியாவில் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து – ஐவர் படுகாயம்!

220 0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த 5 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை கோட்டேகொட பகுதியிலிருந்து சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு, மீண்டும் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோதே வேன் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மாத்தறை கோட்டேகொட பகுதிகளை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

வேனில் 12 பேர் பயணித்துள்ளதாகவும் இதில் சாரதி உட்பட 5 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதோடு ஏனையோர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.