பரீட்சை மண்டபத்தினுள் கையடக்க தொலைபேசியை கொண்டு சென்ற மாணவன்

293 0

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் உயர் தரப் பரீட்சையின் போது குறித்த பாடசாலை அதிபரின் மகன் பாடசாலை பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு சென்று பிறிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய போது கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தற்போது க.பொ.த. உயர் தரப் பரீட்சை ஆரம்பமாகிய நிலையில் மன்னார் – மடு கல்வி வலயத்தின் அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் உயர் தரப் பரீட்சைகள் இடம் பெற்று வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன் உயர்தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை இடம்பெற்றது.

இதன் போது அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அதிபரின் மகன் அப்பாடசாலையிலேயே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றார். இந்த நிலையில் பாடசாலை அதிபரின் மகனான மாணவன் கணித பாடப் பரீட்சையின் போது குறித்த பரீட்சை மண்டபத்தினுள் மறை முகமான முறையில் கையடக்கத் தொலைபேசி ஒன்றைக் கொண்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் பிறிதொரு பாடசாலையின் பரீட்சை மண்டபத்தில் கடமையில் இருந்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கணித பாடத்திற்கான பரீட்சை வினாத்தாளைக் கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அதனை ஒரு ஆசிரியருக்கு அனுப்பி அதற்கான விடையைக் குறித்த ஆசிரியர் மீளப் பெற்றுக் குறித்த மாணவனுக்குக் கையடக்கத் தொலைபேசிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.

அந்த மாணவன் கையடக்கத் தொலைபேசியின் வாட்ஸ்அப் மூலம் வந்ததாகக் கூறப்படும் குறித்த வினாக்களுக்கான விடையை தொலைபேசியை பார்த்து பரீட்சை வினாத்தாளுக்கு விடை எழுதிக் கொண்டிருந்தார்.

இதன் போது அப்பரீட்சை மண்டபத்தில் பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் மாணவன் கையடக்கத் தொலைபேசியை பார்த்து விடை எழுதிக் கொண்டு இருப்பதை அவதானித்துள்ளார்.

உடனடியாக ஆசிரியர் அந்த மாணவனை கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், மற்றும் அடம்பன் பொலிஸ் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

உடனடியாக அப்பரீட்சை மண்டபத்திற்கு வருகை வந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகின்ற ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்கள் கடமையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.