நியாயவிலைக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படும் பொருட்களின் ஒவ்வொரு மூட்டையிலும் குறைந்தபட்சம் இரண்டு கிலோ எடை குறைவாக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நியாயவிலைக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு நிறுவனம் ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் வாங்கப்படாத பொருட்களும் வாங்கப்பட்டதாக குறுஞ்செய்திகள் வருவதாக புகார் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன. உதாரணத்திற்கு, குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகிய பொருட்களை வாங்க தகுதியுடையவர்களாக இருந்தாலும், பெரும்பாலானோர் ஓரிரு பொருட்களை மட்டும், குறிப்பாக சர்க்கரையை மட்டும் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதன் மூலம் வாங்காத அந்தப்பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதேபோன்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து நியாயவிலைக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற பொருட்கள் அனுப்பப்படுவதாகவும், அவ்வாறு அனுப்பப்படும் பொருட்களின் ஒவ்வொரு மூட்டையிலும் குறைந்தபட்சம் இரண்டு கிலோ எடை குறைவாக இருப்பதாகவும், அதாவது மாதா மாதம் பதினைந்தாயிரம் டன் தானியங்கள் குறைவாக விநியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.
இவற்றை தடுத்து நிறுத்தினாலே அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும், குடும்ப அட்டைதாரர்களுக்கும் சரியான எடையில் பொருட்கள் கிடைக்க வழிவகை ஏற்படும் என்றும் பொதுமக்கள் கருதுகிறார்கள்.
எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கிடங்குகளிலும், நியாயவிலைக் கடைகளிலும் நடைபெறும் முறைகேட்டினை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, சரியான எடையுள்ள பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

