தன்னுடைய மாநகர சபை உறுப்பினர் பதவியை இன்று முதல் இராஜினாமா செய்வதாக கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் பீ.எம். ஷிபான் அறிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் நேற்றிரவு (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தலைவர் சிறைக்குச் சென்றிருந்த வேளையில் அவரின் விடுதலைக்காக வேண்டி கடுமையான முறையில் போராடியிருக்கிறேன்.
“தலைவர் விடுதலையான பின்னர் நன்றி கூறும் நிகழ்வுக்காக மருதமுனைக்கு வருகைதந்த போது, அந்த நிகழ்வை ஒழுங்கமைத்திருந்த மத்திய குழுவினர், ஊரில் இருந்த ஒரே ஒரு மாநகர சபை உறுப்பினரான என்னை அவர்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாக அழைக்காமல் விட்டார்கள்.
“தலைவரை கொழும்பில் வைத்து நேரடியாக சந்தித்து பல்வேறு விடயங்களை கலந்துரையாடினேன். அவரின் ஆலோசனைக்கு இணங்க எனது உறுப்புரிமையை இராஜினாமா செய்து, அடுத்ததாக பதவியில் அமர்த்தப்பட்ட இருக்கின்ற ஒருவருக்கு வழங்கவுள்ளேன்.
“மருதமுனையில் கட்சி கடைப்பிடித்துவரும் கொள்கைக்கு நானும் எனது பூரண பங்களிப்பை வழங்கி விடைபெறுகின்றேன். என்னுடைய மாநகர சபை உறுப்புரிமையை இராஜினாமா செய்தாலும் கூட அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் தொடர்ந்தும் வலுவான முறையில் பயணிப்பேன்” என்றார்.
இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் நெய்னா முஹம்மத், ஷிபானின் இடத்தை நிரப்பவுள்ளவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஓய்வு பெற்ற கிராம நிலதாரி ஏ.எச்.ஏ. ழாஹிர் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

