தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் போன உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு கையொப்பமிட்டு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை இன்று (20) அனுப்பி வைத்துள்ளனர்.
வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் வவுனியா மாவட்டத்தலைவி ஜெயவனிதா காசிப்பிள்ளை தெரிவித்துள்ளார்
இதேவேளை குறித்த கடிதத்தின் முழுவிபரமும் வருமாறு
- எமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?
- உயிருடன் இருந்தால், அவர்கள் எந்த இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?
- உயிருடன் இல்லாவிட்டால், அவர்களுக்கு என்ன நடந்தது? யாரால்? எப்படி? கொலைசெய்யப்பட்டு, எங்கே புதைக்கப்பட்டுள்ளார்கள்? என்பவற்றை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
- கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது உறவுகள் உயிரோடு இருப்பின், அவர்கள் தத்தமது குடும்பத்தினரோடு இணைந்து வாழ்வதற்கு உடனடியாக வழி விடுவதோடு, சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
குறித்த கோரிக்கைகள் அனைத்தும் நிபந்தனைகள் ஏதுமின்றி தங்களால் நிறைவேற்றப்படும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். நாங்கள் உயிர் இழந்தால் அதற்குரிய முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம், என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது