குடியரசு தினத்தன்று நடக்கவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து – தமிழக அரசு

149 0

கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்களை நடத்தவேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 26-ம் தேதி (குடியரசு தினம்), மே 1-ம் தேதி (உழைப்பாளர் தினம்), ஆகஸ்டு 15-ம் தேதி (சுதந்திர தினம்) மற்றும் அக்டோபர் 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) ஆகிய 4 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
இதில் உள்ளாட்சி பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இந்நிலையில், குடியரசு தினத்தன்று தமிழகத்தில் உள்ள கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டும் குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.