தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த தமிழக அரசு ஒத்துழைக்கும்: கட்காரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

191 0

பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் பேசி வருகிறார்கள் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த தமிழக அரசு ஒத்துழைக்கும் மத்திய மந்திரி கட்காரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துக்களையொட்டி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், அத்திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை நல்கும் எனவும் தெரிவித்து, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23-ந்தேதி) கடிதம் எழுதியுள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான நிகழ்ச்சியின்போது தாங்கள் பிசினஸ் லைன் கவுண்ட்டவுன் சிறப்புரை ஆற்றிய போது, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களைச் செயல் படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஊடகங்களின் வாயிலாக நான் அறிந்தேன். பல்வேறு பிரச்சினைகளை நீங்கள் எடுத்துரைத்து, அவற்றைச் சமாளிப்பதில் மாநில அரசின் ஒத்துழைப்பைக் கோரியிருந்தீர்கள்.

முந்தைய ஒரு சந்தர்ப்பத்திலும், இதுபோன்ற பிரச்சினைகளை எடுத்துக்காட்டி நீங்கள் எனக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள்; அப்போது நாங்கள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நான் விரிவாக பதிலளித்திருந்தேன்.

எனது அரசு பொறுப்பேற்றபிறகு, தேசிய நெடுஞ் சாலை ஆணையத் திட்டங்களுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எங்களைப் போன்ற தொழில்மயமான மாநிலத்திற்கு, சாலை இணைப்பின் முக்கியத்துவத்தை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம்.

எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்துத் துறைகளுக்கும் உரிய அறிவுரைகளை நான் வழங்கியுள்ளேன். திட்டங்களைச் செயல்படுத்துவதில் தற்போதுள்ள பிரச்சினைகள் பல ஆண்டுகளாக நிலவி வருபவை. இப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்க தலைமைச் செயலாளரின் கீழ் உள்ள அதிகாரிகள் குழு உரிய முயற்சிகளை எடுத்து வருகிறது.

எனது ஆய்வுக் கூட்டங்களின் தொடர்ச்சியாக, பொதுப் பணித் துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்களில் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தொடர்புடைய அனைத்துத் துறைகளுடனும் இதுவரை நான்கு கூட்டங்களை நடத்தியுள்ளார்.

மேலும், தலைமைச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மைச் செயலாளரும் இதுதொடர்பாக 13 முறை கூட்டங்களை நடத்தியுள்ளனர். இவ்வாறாக, கடந்த ஆறு மாதங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்களுக்கான உயர் மட்டக் கூட்டம் 15 நாட்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டுள்ளது.

திட்டங்களில் நிலவிடும் பிரச்சினைகளைத் தீர்த்திட ஏதுவாக, தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடனும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடனும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

பொதுப் பணித்துறை அமைச்சர், 2021 அக்டோபர் 12-ந்தேதி டெல்லியில் உங்களைச் சந்தித்து, தமிழ் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்திட எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறித்து உங்களுக்கு விளக்கினார்.

மேலும், அந்தக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, மாவட்ட ஆட்சியர்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன், 2021 டிசம்பர் 16-ந்தேதி கூட்டுக் கூட்டத்தைக் கூட்டினார். புது தில்லியின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பொது மேலாளரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஒரு நாள் முழுதும் நடைபெற்ற கூட்டத்தில், அனைத்துப் பிரச்சினைகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரம் கண்டறியப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 80 விழுக்காடு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் முன்னிலைப்படுத்தப்படும் திட்டங்களில், குறிப்பாக விக்கிரவாண்டி,கும்பகோணம், தஞ்சாவூர் சாலை மற்றும் அரியலூர்காரைக்குடி சாலை போன்றவை தொடர்பான பிரச்சினைகள் பொதுப் பணித் துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரின் தலையீட்டின் காரணமாகத் தீர்க்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையக் குழுவினருடன் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

அரசு நிலங்களில், நில அனுமதிகளைப் பொறுத்த வரையில், தமிழ்நாட்டில் இரண்டு பருவமழை இருப்பதால், அவை தற்போது மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகின்றன, பொதுவாக ஏரிகள், குளங்களில் ஆறு மாதங்களுக்கு நீர் இருப்பு உள்ளன.

எனினும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, அரசு நிலங்களிலும் நீண்ட காலத்திற்கு அனுமதி வழங்க சுரங்கவிதிகளில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் நிலங்களுக்கு, ஏற்கனவே ஒன்பது மாதங்கள் அல்லது அதற்கு மேல் அனுமதி வழங்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்கள் தொடர்பான மறுஆய்வின்போது, சில திருத்த நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் எடுக்கவேண்டியதும் அவசியமாகும். இவை சில பிரச்சினைகளில், திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட வழிவகுக்கின்றன. தாங்கள் மேற்கொள்ள வேண்டிய தேவையான சில நடவடிக்கைகள் குறித்து நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்:

•தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின்கீழ் நிலம் கையகப்படுத்துவதற்கான நில மதிப்பீட்டை அங்கீகரிக்கும் முறை முறைப்படுத்தப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நிலம் கையகப்படுத்துவதற்கான தகுதிவாய்ந்த ஆணையம் (சி.ஏ.எல்.ஏ.) நிர்ணயித்த மதிப்பீட்டையோ அல்லது மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்பட்ட நடுவர் முடிவுகளுக்கோ ஒப்புக் கொள்ளவில்லை, இது திட்டச் செயல்முறையை முடக்கி உள்ளது.

• இதேபோல், பல சந்தர்ப்பங்களில் மண்கிராவல் எடுப்பதற்குத் தேவையான அனுமதி விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள் இல்லாமல் வழங்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், ஏரிகள், குளங்களில் தண்ணீர் தேக்கமாவதால் அல்லது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் இருப்பதால், சாத்தியமற்ற இடங்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தகைய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் முன் ஆராயப்பட வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து, தமிழ் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு, மாநில அரசு தனது சிறந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என்பது தெள்ளத் தெளிவாகும், மேலும், இவை நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல பிரச்சினைகளைத் தீர்க்க உதவியுள்ளன என்பதை அறிய முடிகிறது.

மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அதன் விளைவாக துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியின் போது தாங்கள் உரையாற்றியது சற்று வியப்பாக இருந்தது. இருப்பினும், அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு எனது அரசு, தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று நான் மீண்டும் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.