விசாரணை கைதி மர்ம மரணம் – சேந்தமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு

278 0

சேலம் அருகே விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் சேந்தமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் கருப்பூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). மாற்றுத்திறனாளியான இவரை திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசார் கடந்த 11-ந் தேதி கைது செய்து அந்த மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

12-ந் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் அன்று இரவு இறந்தார். இதற்கு போலீசார் தொந்தரவே காரணம் என கூறியும், காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி இமயவரம்பன் தலைமையில் 13-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இமயவரம்பன் மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

14-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர், சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், இறந்தவரின் மனைவி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் பங்கேற்றனர். அதில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம், அரசு வேலை, போலீசார் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை பெறுவோம் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பாக பிரபாகரனின் சகோதரர் சக்திவேல் சேலம் அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று சேலம் 1-வது கோர்ட் மாஜிஸ்திரேட் கலைவாணி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து பிரேத பரிசோதனையும் நடந்தது.

மேலும் பிரபாகரனுக்கு ஆதரவாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரைப்படி திருச்செங்கோடு தாலுகா முதல்நிலை காவலர் குழந்தைவேல், புதுச்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பூங்கொடி, சேந்த மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து மேற்கு சரக ஐ.ஜி. பொறுப்பில் உள்ள சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் நஜ்மல் கோடா உத்தரவிட்டார்.

இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ள பிரபாகரனின் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்துள்ளனர். அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.