வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானது

157 0

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிற்கு இன்றையதினம்(14) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

21.12.2021 அன்று ஆரம்பமான அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக குழு மற்றும் பொதுச் சபையின் அனுசரணையுடன் நாடளாவிய ரீதியில் மருத்துவ தொழிலைப் பாதிக்கும், தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கையானது நியாயமானதும் உண்மையானதுமாகும்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன் வைத்துள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகள் வன்னி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்ற பிரச்சனையுமாகும்.

எனவே சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதி நிதிகளுடன் கலந்துரையாடி முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுப்பது உகந்தது என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.