புங்குடுதீவிலிருந்து மரங்களை கடத்திய சாரதி கைது

196 0

புங்குடுதீவு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக பனைமரங்கள் மற்றும் பெறுமதியான மரங்கள் என்பவற்றை பாரவூர்தியில் கடத்திச் சென்ற சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மரக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியையும், மரங்களையும் கையகப்படுத்தியுள்ள பொலிஸார் பாரவூர்தி சாரதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புங்குடுதீவு மடத்துவெளிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றது.

இன்றையதினம் ஜே – 26 கிராம சேவையாளர் மற்றும் அப்பகுதியின் பொருளாதார உத்தியோகத்தர் ஆகியோரது உறுதிப்படுத்தலில் 45 சீவிய பனைமர துண்டுகளை எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அதிகளவான மரங்களை பரவூர்தியில் எடுத்து செல்ல முற்பட்ட வரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, பல மாதங்களாக கண்டியை சேர்ந்த நபர் ஒருவர் புங்குடுதீவை சேர்ந்த அரசியல் பின்னணியை கொண்ட இருவருடன் இணைந்து சட்டவிரோதமாக பனைமரங்கள், உள்ளிட்ட மரங்களை வெட்டி கடத்தி வருவதாகவும், அவர்கள் ஊர்காவற்துறை பொலிஸாருடன் நல்லுறவை பேணுவதனால், பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என ஊரவர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் குறித்த நபர்கள் மரக்கடத்தலில் ஈடுபடுவதாக முன்னராக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் , அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், பொலிஸ் உயர் அதிகாரியிடம் முறையிட்ட பின்னரே ஊர்காவற்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.