சம்பள மாற்றம் இம்மாதம் முதல் வழங்கப்படும்

233 0
அண்மையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அதிபர், ஆசிரியர்களின் சம்பளத் திருத்தத்தை இம்மாதம் முதல் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சம்பளத் திருத்தம் தொடர்பான மாதிரிப் படிவம் தயாரிக்கப்பட்டு, சகல வலயக் கல்விப் பணிமனைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

“அதன்படி, சம்பள மாற்றங்களை மேற்கொண்டு, ஜனவரி மாதம் முதல் வேதனங்களை வழங்குமாறு கேட்டுள்ளேன். அதற்கிணங்க சம்பளத் திருத்தப் பணிகள், சகல வலயக் கல்விக் காரியாலயங்களிலும் சீராக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

“எனவே, இம்மாதம் முதல் அதிபர், ஆசிரியர்களது திருத்தப்பட்ட சம்பளம் வழங்கப்படும்” என்றார்.

​இதேவேளை, சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 5,000 ‌ ரூபாய் விசேட கொடுப்பனவாக வழங்கப்படும் என்று அரசால் கூறப்பட்டது. அது இம்மாதம் வழங்கப்படுமா என அவரிடம் கேட்ட போது, “அது தொடர்பில் எந்த சுற்றுநிருபமும் எமக்குக் கிடைக்கப்பெறவில்லை. எதற்கும் தலைமை கணக்காளரிடம் கேட்டு, அப்படி சுற்றுநிருபம் வந்திருந்தால், அதனையும் வழங்க நடவடிக்கை எடுப்போம்” என்றார்.