மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கடத்திக் கொலைசெய்த குற்றச்சாட்டின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவருக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (12) பிணை வழங்கியது.
2008ஆம் ஆண்டு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர், சிலரால் கடத்திக் கொல்லப்பட்டு, முனைக்காடு மையானத்தில் புதைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் 2019ஆம் ஆண்டு தெரியவந்தது.
இவ்விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் ஆயுதக் குழுவின் உறுப்பினர்களான, “மகிழன்” என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன், “மதன்” என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, “லிங்கன்” என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய மூவரை, ஓட்டமாவடி, களுவாஞ்சிக்குடி மற்றும் கல்லடி ஆகிய இடங்களில் வைத்து 2019ஆம்ஆண்டு மார்ச் மாதம் கைது செய்திருந்தனர்.
இதனடிப்படையில், இவர்கள் குறித்தான வழக்கு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவந்த நிலையில், சந்தேகநபர்கள் சார்பில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்கீழ், சட்டமா அதிபர் திணைக்களத்தால் குறித்த வழக்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் இருந்து நீக்குவதுடன், குறித்த வழக்கை சாதார தண்டனைச் சட்ட கோவையின் கீழ் விசாரணைகளை முன்னெடுப்பதாக உயர்நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சந்தேக நபர்கள் சார்பில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் பிணை தாக்கல்செய்யப்பட்டு, அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்தனர்.
இந்நிலையில், குறித்த பிணை மனுவானது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தடுத்துவைக்கப்பட்டுள்ள மூவரையும் 10 இலட்சம் ரூபாய் காசுப் பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா அனுமதியளித்துள்ளார்.

