ஒமைக்ரான் பரவல் எதிரொலி – 14 மில்லியன் பேருக்கு பரிசோதனை நடத்தும் சீனா

259 0

சீனாவின் தியான்ஜின் நகரில்தான் முதன்முதலாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது. இதனால் அங்கு ஒமைக்ரான் பரவல் வேகமெடுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக சீனாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சீனா தலைநகர் பீஜிங் நகரில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பீஜிங் அருகிலுள்ள துறைமுக நகரான தியான்ஜினில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 2 பேருக்கு புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, தியான்ஜின் நகரிலுள்ள சுமார் 1 கோடியே 40 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மொத்தம் உள்ள 16 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் முழுமையாக பரிசோதனை நடத்தப்பட்டது. எஞ்சிய 12 மாவட்டங்களில் விரைவில் பரிசோதனை நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.