மக்கள் படும் துன்பங்களைப் பார்க்க முடிகிறது. இதிலிருந்து அரசாங்கத்தால் மாத்திரமே மக்களை மீட்க முடியும் என தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி, ”வணங்கிக் கேட்கிறேன் அமைச்சுப் பதவி வேண்டாம்” எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் மக்களின் கருத்துக்களை, அபிப்பிராயங்களை அரசாங்கத்துக்குக் கூற வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளான எமக்கிருக்கிறது. அதனை செய்ய நாம் தவறினால் அது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் எனவும் கூறினார்.
உயர் பதவிகளில் பொறுத்தமானவர்களை அரசாங்கம் நியமிக்க வேண்டும். மேலும் பொதுவேட்பாளர் தொடர்பிலோ அல்லது தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கம் பேசிக்கொண்டிருக்கும் நேரமில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
உண்மை பேசுவதற்கு ஒருபோதும் தயங்கக்கூடாது. அமைச்சரவை மாற்றம் நடைபெறபேவதாக கூறப்படுகிறது. வணங்கிக் கேட்கிறேன். அதில் எனக்கு எந்தவொரு அமைச்சுப் பதவியும் வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் படும் துன்பங்களை நாம் பார்க்கிறோம். இதிலிருந்து மக்களை மீட்க அரசாங்கத்தால் மட்டுமே முடியும். மக்களை முட்டாள்கள் என நினைத்துகொண்டு ஆட்சி செய்தால், அரசாங்கமே இறுதியில் முட்டாளாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

