இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களின் நன்மை கருதி அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்ற கருத்தை மலையக மக்கள் முன்னணியாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியாகவும் கடந்த காலங்களில் வலியுறுத்தி வந்திருக்கின்றோம் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தொழிலாளர்களின் நலன் கருதி தொழிற்சங்கங்கள் ஒன்றுபட வேண்டும் கூறியிருக்கின்றமை தொடர்பாக இன்று ஹட்டன் டிக்கோயா வனராஜாவில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 42 இலட்சம் பெறுமதியான ஒரு தொகை பொருட்கள் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கும் கிராமப்புற மக்களும் ஹட்டன் டிக்கோயா வனராஜா ஆலய மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் விஷ்வா புஷ்பநாதன், பிரதேச சபை உறுப்பினர்களான ஆனந்தன், ராஜ்குமார், எஸ்.கிருஷ்ணவேனி, ரவீந்திரராஜ், ஜனார்த்தன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,
இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களின் நன்மை கருதி அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளது. அதனை நான் வரவேற்கின்றேன்.
ஆனால் இந்த விடயத்தை நாங்கள் அதாவது மலையக மக்கள் முன்னணியாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியாகவும் கடந்த காலங்களில் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
ஆனால் அன்று அதனைக் கண்டு கொள்ளாதவர்கள் இன்று அதே விடயத்தைப் பேசுகின்றார்கள். இது காலம் கடந்த ஞானமாக இருந்தாலும் பரவாயில்லை நாங்கள் தொழிலாளர்களுக்காக இணைந்து செயற்படுவதற்கு எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றோம்.
எனவே அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசே இதற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நாங்கள் இணைந்து செயற்படுவதற்குத் தயாராகவே இருக்கின்றோம்.
நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே தொழிலாளர்களின் நன்மை கருதி கட்சி அரசியல் பேதங்களை மறந்து நாம் ஒன்றுபட வேண்டும் என்று ஊடகங்கள் ஊடாக தெரிவித்திருந்தேன்.bஆனால் அன்று அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மௌனமாகவே இருந்தது.
இருந்தாலும் தற்பொழுது காலம் கடந்த ஞானம் ஏற்பட்டுள்ளதை நான் வரவேற்கின்றேன்.இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டால் நாங்கள் என்றும் தொழிலாளர்களுக்காக யாருடனும் இணைந்து செயற்படுவதற்குத் தயாராகவே இருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


