மத்திய அரசு பொறுப்பேற்கும் போது பிரதமர் மோடி 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதாக உறுதியளித்தார். ஆனால் அதற்கு பதிலாக லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர் என முத்தரசன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநில மாநாடு அடுத்த ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடக்க இருக்கிறது. இதில் கட்சியை பலப்படுத்துவதற்கான அரசியல் அறிக்கை முன்வைக்கப்பட உள்ளது.
மாநாட்டில் இந்தியா முழுவதும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டின் நகல் அறிக்கை உறுதிப்படுத்துவதற்காக ஜனவரி 26, 27, 28 ஆகிய தேதிகளில் தேசிய பொதுக்குழு கூட்டம் கோவை பீளமேட்டில் நடக்கிறது. இதில் 125 தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். சர்வதேச மற்றும் தேசிய அரசியல் நிலையை அறிக்கையாக முன் வைக்கப்பட இருக்கிறது.
மத்தியில் ஜனநாயக விரோத ஆட்சி நடைபெறுகிறது. இந்தியாவில் ஹிட்லரை போன்று பாசிச ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. பாசிச அரசாக பேராபத்தாக இந்த மத்திய அரசு செயல்படுகிறது. பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தொழிலாளர்களை நசுக்கி வருகிறது.
மத்திய அரசு பொறுப்பேற்கும் போது பிரதமர் மோடி 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதாக உறுதியளித்தார். ஆனால் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு பதிலாக லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் யாருக்கும், எந்த கட்சிக்கும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படாத நிலையை பா.ஜ.க உருவாக்கி இருக்கிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனை மத்திய அரசு தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
டிசம்பர் 26-ந் தேதி கட்சியின் ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அதே நாளில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்த நாளும் கொண்டாடப்பட இருக்கிறது. அடுத்த நாள் 27-ந் தேதி சென்னையில் மறைந்த தா. பாண்டியனின் உருவப்படத்தை நல்லகண்ணு திறந்துவைக்கிறார். இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

