கடவுள், இந்த உலகத்துல கஷ்டப்படணும்னு படைச்சிருக்கார் – 3 கடிதம் எழுதி வைத்து மாணவி தற்கொலை

205 0

தற்கொலை செய்து கொள்ளும் முன்பு மாணவி 3 கடிதங்களை எழுதி இருக்கிறார். அதில் ஒரு கடிதத்தை அவரே கிழித்து போட்டுள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சமீப காலமாகவே பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக போலீஸ் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொள்ள முடியாமல் அவ்வப்போது மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மாங்காட்டை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே அந்த மாணவி பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை அவர் எழுதி உள்ள கண்ணீர் கடிதமும் உறுதி செய்து இருக்கிறது.

மாணவி எழுதிய உருக்கமான முழு கடிதமும் கிடைத்துள்ளது. அதில் அவர் வாழ்வதற்கு பிடிக்கவில்லை. பாலியல் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது போன்ற வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தில் அவர் கண்ணீர் மல்க கூறி இருப்பதாவது:-

எனக்கு வாழ பிடிக்கல. கொடூரமான சமூகத்தில் தப்பான எண்ணங்களை ஏன் இப்படி கடவுள் படைத்து இருக்கிறார். என்னை இந்த உலகத்துல கஷ்டப்படணும்னு படைச்சிருக்கார். என்னை பார்த்தாலே வெறுப்பு வருகிறது. என்னை சிலர் தவறாக பயன்படுத்தி விட்டனர்.

அது எனக்கு பிடிக்கலை. அந்த யோசனையே மனசுல ஓடிட்டு இருக்கு. எனக்கு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லை.

வெளியில சொன்னா என்னை தான் தப்பா பேசுவாங்க. இனிமே தப்பான எண்ணத்தோடு யாரும் பெண்களிடம் பேச விடக்கூடாது. யாரையும் நம்ப முடியலை. முக்கியமாக உறவினர்களை. யாரு இப்படி பண்ணாங்கன்னு எனக்கு தெரியும் (எதையோ அடித்துள்ளார்) பொண்ணுன்னு என்னை கூட பார்க்கல. நீ எல்லாம் டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லக் கூடாது. நீ எல்லாம் இருக்கவே கூடாது. கடவுள் உன்னை விரைவில் தண்டிப்பார்.

மாணவி எழுதிய கடிதம்

இதற்கு மேல் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க வேண்டும். இதுக்கு மேல முடியாது. மனசு ரொம்ப வலிக்குது. எனக்கு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லை. என்னால நிம்மதியா தூங்க முடியல. கனவு வந்து டார்ச்சர் பண்ணுது. படிக்க முடியலை. இந்த சமூகத்துல பாதுகாப்பே இல்லை. என்னோட கனவு எல்லாம் போயிடுச்சு. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் தங்கள் மகன்களுக்கு சொல்லிக் கொடுங்கள். எனக்கு நியாயம் கிடைக்கும்னு நினைக்கிறேன். உறவினர்கள், ஆசிரியர்கள் யாரையும் நம்பாதீர்கள். அனைத்து மனிதர்களும் வேட்டையாடுபவர்கள் தான்.

அம்மா போய்ட்டு வர்றேன் இன்னொரு உலகத்துக்கு பாதுகாப்பான இடம் கல்லறையும், தாயின் கருவறையும்தான். பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பான இடம் இல்லை. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு மாணவி எழுதிய 2 பக்க கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இது தவிர 3-வதாகவும் மாணவி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தின் கடைசியில் உடலை மட்டும் பார்த்து பழகுபவர்கள் ஆண்மைக்கு தகுதி இல்லாதவர்கள். மோசமான உலகத்தில் பிறந்து விட்டேன். மறுபடியும் வேறு உலகத்துக்கு செல்கிறேன். ‘‘ஸ்டாப் செக்சுவல் அராஸ் மெண்ட். ஜஸ்டிஸ் பார் மீ’’ என குறிப்பிட்டுள்ளார். தூக்கு கயிறு படம் ஒன்றையும் கடிதத்தில் அவர் வரைந்துள்ளார்.

இந்த கடிதத்தை கிழிந்த நிலையில்தான் போலீசார் கைப்பற்றி ஒட்ட வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, ‘‘தற்கொலை செய்து கொள்ளும் முன்பு மாணவியே 3 கடிதங்களையும் எழுதி இருக்கிறார். அதில் ஒரு கடிதத்தை அவரே கிழித்து போட்டுள்ளார்’’ என்று தெரிவித்தனர்.

கடிதத்தில் சில இடங்களில் எதையோ எழுதிவிட்டு முழுமையாக அழித்துள்ளார்.

இந்த வழக்கில் அதில் இடம்பெற்றுள்ள விவரங்களே முக்கிய ஆதாரங்களாக இருக்கும் என்று போலீசார் கருதுகிறார்கள். தன்னை தற்கொலைக்கு தூண்டியவர்களின் பெயர்களை எழுதிவிட்டு பின்னர் அவற்றை மாணவி அழித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுதொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.