போராடும் வங்கி ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் -விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தல்

269 0

பாஜக ஆட்சியில் தொடர்ந்து மக்கள் விரோத போக்கும் தொழிலாளர்களின் உரிமையை நசுக்கும் செயலும், சர்வாதிகார மனநிலையும் எதிர்கால இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாக விஜய் வசந்த் எம்பி கூறி உள்ளார்.

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் வங்கி சேவைகள் முடங்கி உள்ளன.
வங்கி  ஊழியர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவ்வகையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் கொள்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், உடனடியாக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் தேவைகளை உணர்ந்து தீர்வு காண வேண்டும் என நிதி மந்திரியை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தனியார் வங்கிகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது நடைபெற்று வரும் பாஜக ஆட்சியில் தொடர்ந்து மக்கள் விரோத போக்கும் தொழிலாளர்களின் உரிமையை நசுக்கும் செயலும், சர்வாதிகார மனநிலையும் எதிர்கால இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளன.
குறிப்பாக பாஜக அரசு ஆட்சி செய்த கடந்த ஏழு ஆண்டு காலத்தில் மட்டும் அரசு வங்கிகள் ஈட்டிய மொத்த லாபம் ரூ.11,10,913 கோடியாகும். இதில் வாராக்கடன்களுக்காக லாபத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதி 12,38,346 கோடி ரூபாய். இந்த 12,38,346 கோடி ரூபாய் பணம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இத்துடன் 8,10,262 கோடி இந்த ஏழாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் அளவிற்கு கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய வராக்கடன்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க வங்கிகள் எவ்வாறு லாபத்தில் செயல்பட முடியும். வாரா கடன்களை பெற கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என வங்கி ஊழியர் சங்கத்தினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டுவருவது கடும் கண்டனத்துக்கரியது.
இந்த வாராக்கடன் சுமை காரணமாக கடன் வட்டி அதிகரிப்பு, சேவை வரி அதிகரிப்பு போன்ற அழுத்தம் அனைத்தும் வாடிக்கையாளர்கள் மீதே திணிக்கப்படுகிறது என்பது வேதனை அளிக்கும் செயல். தற்போது மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கிகளில் 51 சதவீத பங்குகள் அரசிடம் உள்ளது. இதனை தற்போது 33 சதவீதமாகவோ, 26 சதவீதமாகவோ குறைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பாரத் ஸ்டேட் வங்கி தவிர ஏனைய 11 பொதுத்துறை வங்கிகளையும்  எதிர்காலத்தில் அரசு எளிதாக தனியார்மயமாக்க சாதகமான நிலை ஏற்பட்டுவிடும்.
ஒருவேளை அரசு நினைத்ததுபோன்று அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால் 34 கோடி ஜன் தன் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவை மறுக்கப்படும். மக்கள் வங்கிகளின் மீதான நம்பக தன்மையை இழக்க நேரிடும். மேலும் விவசாயம், சிறு குறு தொழில் நலிவடைந்து போகும். கல்விக்கடன் பெற முடியாமல் மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் போகும். இந்த சங்கிலி தொடரால் நாட்டில் வேலையின்மை, பசி, பஞ்சம், நுகர்வுதிறன் குறைவு போன்ற நிலை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு விஜய் வசந்த் கூறி உள்ளார்.