ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகர் புறநகரில் உள்ள செவான் என்ற இடத்தில் போலீஸ் முகாம் அருகே நேற்று மாலை போலீஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 2 ஆயுதம் ஏந்திய போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கவலைக்கிடமாக இருந்த வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி, ஜம்மு, காஷ்மீரின் முன்னாள் முதல் அமைச்சர்கள் கண்டனமும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ” ஸ்ரீநகர் அருகே போலீஸ் பஸ் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்த மற்ற வீரர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.

