கைவிலங்கைப் பயன்படுத்தி கைவரிசையைக் காட்டியவர் சிக்கினார்

221 0

சிறையிலிருந்து வெளியே வரும் போது திருடிக்கொண்டு வந்த கைவிலங்கைப் பயன்படுத்தி, பொலிஸார் என தெரிவித்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர் ஒருவர் கிருலப்பனை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 34 வயதுடைய ஓட்டோ சாரதி என்றும் இவர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டி- சென்லாரன்ஸ் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றுக்குள் இருந்த நபரை பயமுறுத்தி, கைவிலங்கிட்டு அவரிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட சந்தேகநபர், கிருலப்பனை- பூர்வாராம பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது அவரிடம் 5,900 மில்லிகிராம் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹெரோய்ன் விற்பனை தொடர்பில் சந்தேகநபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் அங்கிருந்து கைவிலங்கை திருடிக்கொண்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சீ.சீ.டிவி காட்சிகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமையவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபரிடமிருந்து 1,10,000 ரூபாய் பணமும் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார், கத்தி, கைவிலங்கு  மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.