திருக்கோவில் பிரதேச சங்கமன்கண்டி, தாண்டியடி பிரதேசத்தில் பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை (10) நள்ளிரவு தீடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலையால் அப்பிரதேசத்தில் முறுகல் நிலைமை ஏற்பட்டது.
இவ்வாறு புத்தர் சிலை வைக்கப்பட்ட செயற்பாட்டைக் கண்டித்து , பிரதேச மக்கள் வீதியில் அமர்ந்து நேற்று (11) எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
பொத்துவில்- கல்முனை பிரதான வீதியில் தாண்டியடிக்கும் சங்கமங்கண்டிக்கும் இடையிலான பிரதேசத்திலுள்ள காட்டுப் பிரதேசத்திலேயே இவ்வாறு புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்டுள்ளதுடன், பொத்துவில் பிரதேசத்திலுள்ள பிரபல பிக்குகள் சிலரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இதனையறிந்த பிரதேச பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், நேற்று (11) அதிகாலை 5 மணி முதல் இங்கு ஒன்று கூடி நில ஆக்கிரமிப்பாளர்களின் இச்செயற்பாட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர்ஏ.றஹீம், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன் ஆகியோரும் காணப்பட்டனர்.
சிலை அகற்றப்படும் வரை இங்கிருந்து நகரப்போவதில்லையென போராட்டத்தில் ஈடுபட்டோர் சூளுரைத்தர்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.


