சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (10) பாராளுமன்றத்தில் விசேட வௌிப்படுத்தல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த ஒப்பந்தத்தை சபைப்படுத்திய அவர், குறித்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வேறொரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை அரசாங்கத்திற்கும் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பல முறை கோரப்பட்டிருந்தது. அதனை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொறுப்பான அமைச்சர் காமினி லொகே தெரிவித்தார்.
ஆனால் அதன் பின்னர் நான் அவரை பாராளுமன்றத்தில் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு தெரிந்த வரையில் அந்த ஒப்பந்தம் அமைச்சரவையில் கூட முன்வைக்கப்படவில்லை. இதனை இன்றைய நிதியமைச்சக விவாதத்தில் முக்கியமாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஆனால் என்னிடம் அந்த ஒப்பந்தம் உள்ளது.
இலங்கை அரசாங்கம் விற்பனையாளராகவும் NFC ஸ்ரீலங்கா பவர் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வாங்குபவராகவும் கைசாத்திட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தைதான் பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு வலியுறுத்தினோம்.
ஏனென்றால் இது தனியார் சொத்து பரிமாற்ற ஒப்பந்தம் அல்ல. ஏற்கனவே பல அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான நாட்டின் எரிசக்தித் துறையையும் கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தையும் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்காக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமாகும். எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நாம் கூறியும் இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
எனவே,சபாநாயகர் அவர்களே, அந்த ஒப்பந்தத்தை நான் சபைப்படுத்துகிறேன். அமைச்சரவையில் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் NFC Sri Lanka Power Holdings என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். எனவே, இது முற்றிலும் அமைச்சரவையை மீறிய செயலாகும். என்றார்.

