பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து இறை வணக்க நடைமுறை தொடர அனுமதி வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

324 0

இறைவணக்கத்திற்காக மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு வருவதும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, நீதிநெறி கதைகள் சொல்வதும் வழக்கமானது மட்டுமல்ல மாணவர்கள் நலன் காக்கும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒமைக்ரான் வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

அதே சமயம் பள்ளிகளில் நடைபெறும் இறைவணக்கக் கூட்டம், கூட்ட நெரிசல் காரணத்தால் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக வகுப்பறையில் தனி மனித இடைவெளியில் இறைவணக்கம் நடைபெற உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.

காரணம் சில நிமிடங்கள் இறைவணக்கம் பாடி படிக்கத் தொடங்குவது மன அமைதியோடு, படிப்பில் ஆர்வத்தை அதிகப்படுத்தும்.

குறிப்பாக மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடை பிடித்தும் இறைவணக்கத்தில் பங்கேற்பது பாதுகாப்பாக இருப்பதோடு நல்லொழுக்க நெறி முறைகளை பின்பற்றுவதற்கும் வழிவகுக்கும். இதனையே ஆசிரியர்களும், பெற்றோர்களும், பொது மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இறைவணக்க நடை முறையில் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பள்ளிகளில் நடைபெறும் இறைவணக்க நடைமுறைக்கு தடை விதித்து இருப்பது ஏற்புடையதல்ல.

வைரஸ் தடுப்புக்கு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. என்றாலும் பள்ளிகளில் ஒழுக்கம், பண்பாடு ஆகியவை சம்பந்தப்பட்ட நடைமுறையில் தற்காலிக மாற்று ஏற்பாடு செய்து இறைவணக்கம் தொடர அறிவிப்பு வெளியிட்டு இருக்க வேண்டும்.

இறைவணக்கத்திற்காக மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு வருவதும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, நீதிநெறி கதைகள் சொல்வதும் வழக்கமானது மட்டுமல்ல மாணவர்கள் நலன் காக்கும்.

எனவே தமிழக அரசு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கு அதிக அக்கறையோடு செயல்பட வேண்டும் மற்றும் பள்ளிகளில் வகுப்பறையிலோ அல்லது வழக்கமான நடைமுறையிலோ முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் இறைவணக்க நடைமுறையை தொடர அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.