மதமாற்றத்திற்கு எதிராக துணிந்து செயற்பட வேண்டும்

190 0

வவுனியா கிழவன் குழம் பகுதியில் மதமாற்றக்காரர்களால் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மார்கண்டு ஜெகதீஸ்வரனின் துணிச்சலையும் செயற்பாட்டையும் அதற்கு எதிராக செயற்பட்டதையும் பாராட்டுவதுடன் அவருக்கு துணையாக என்றும் இருப்போமென வெள்ளவத்தை கங்காதீஸ்வர யாக பீடத்தின் தலைவர் சாமி கங்காதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மதமாற்றம் மிகவும் வேகமாக இடம்பெற்று வருகின்றது.குறிப்பாக வடக்கு, கிழக்கு மலையக பகுதிகளில் இந்த செயற்பாடானது மிகவும் வேகமாக நடைபெறுகின்றது.

மக்களின் வறுமை நிலையை பயன்படுத்தி இந்த செயற்பாட்டை ஒரு குழுவினர் திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார்கள். இதற்காக அவர்கள் பாரிய அளவில் நிதியையும் தங்களுடைய ஆட்பலத்தை பயன்படுத்தி வருகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

’ஒரே நாடு, ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதியின் செயலணி, வவுனியாவில் மக்களின் கருத்தரியும் நிகழ்வை நடத்தியது. அதில், கலந்து கொண்ட வுவனியா கிழவன் குழத்தை சேர்ந்த மார்கண்டு ஜெகதீஸ்வரன் தங்களுடைய பகுதிகளில் இடம்பெறுகின்ற மதமாற்ற செயற்பாடு தொடர்பாக மிகவும் விரிவாக ஆதாரங்களுடன் குழுவினருக்கு
தெளிவுபடுத்தி இருந்தார்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குழுவினர், மதுபோதையில், அவருடைய வீட்டுக்குச் சென்று அவரை அச்சுறுத்தியது மட்டுமன்றி, கட்டாய மதமாற்றம் செய்யவும் முயற்சி செய்துள்ளனர்.

இதன்போது மிகவும் துணிச்சலாக செயற்பட்ட ஜெகதீஸ்வரன் இது தொடர்பாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததுடன் அவர்களை தற்பொழுது பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த துணிச்சலே எங்களுடைய இளைஞர்களுக்கு வர வேண்டும்.இந்த விடயத்தில் நாம் அனைவரும் ஜெகதீஸ்வரனுக்கு ஆதரவாக நின்று செயற்பட வேண்டும்.அது மட்டுமல்லாமல் எங்களுடைய ஆலயங்களின் அறங்காவலர் சபை ஆலய நிர்வாகம் என்பன இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.