வைத்தியசாலைகளில் சுகயீன விடுமுறையுடன் கவனயீர்ப்பு போராட்டம்

214 0

பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி, நாட்டின் பல வைத்தியசாலைகளில் சுகாதாரத் துறையினர், இன்று (25) சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், கவனயீர்ப்புப் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் சுகாதாரத் துறையின் தொழிற்சங்க உறுப்பினர்கள், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதாரத் தொழில் வல்லுநர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், தாதியர்கள், மருந்தாளர்கள் மற்றும் மருந்தக உதவியாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேவை தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படல் வேண்டும், கடந்த அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட பதவி உயர்வு தீர்மானங்கள் இதுவரையில் நிறைவேற்றப்படாமை மற்றும் சிறியளவில் வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்படவேண்டும் உட்பட பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

மேலும், தரநிலை தொடர்பிலான சுற்றுநிரூபங்கள் வெளியிடப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் அதனை நடைமுறைப்படுத்தப்படாமை, சுகாதாரத் துறையில் உள்ளவர்கள் பட்டங்களைப் பெறும்போது அவர்களுக்கான பதவியுயர்வுகள் வழங்கப்படவேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் காரணமாக, வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.